தமிழகம் முழுவதும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - மாணவ-மாணவியர்கள் ஆர்வமுடன் வருகை
Jan 19 2021 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கியுள்ளன.
சென்னையை அடுத்த தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், பல்லாவரம் ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவ - மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமர வைப்பது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 234 பள்ளிகளில், சுமார் 38 ஆயிரம் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் பங்கேற்றனர். பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே, பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 269 பள்ளிகள் திறக்கப்பட்டு, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 12-ம் வகுப்பு மாணவர்களும், வகுப்புகளுக்கு வருகை தந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. வகுப்பறைகளில் 25 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.