தா.பாண்டியன் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் - கட்சிகளை தாண்டி மாண்புமிகு அம்மா மீது பெருமதிப்பு கொண்டிருந்தவர் என டுவிட்டர் பதிவு
Feb 26 2021 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் திரு. தா.பாண்டியன் மறைவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சிகளை தாண்டி மாண்புமிகு அம்மா மீது பெருமதிப்பு கொண்டிருந்தவர் திரு. பாண்டியன் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் திரு. தா.பாண்டியன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
திரு. தா.பாண்டியன், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர் - அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர் -
கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர் - தனிப்பட்ட முறையில் தன்னோடு திரு. தா. பாண்டியன் நட்புடனும் அன்புடனும் பழகியவர் என திரு. டிடிவி தினகரன் நினைவு கூர்ந்துள்ளார்.
திரு. தா.பாண்டியனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் திரு.டிடிவி தினகரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.