அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்தத்தை தொடங்கிய சிஐடியு உள்ளிட்ட 9 சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, முதல் நாளைக் காட்டிலும் இன்று மேலும் குறைந்ததால், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று 5 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று 30 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த போக்குவரத்துதுறை அமைச்சர், தற்போது இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கோவையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனினும், தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
மதுரை கோட்டத்தில், மொத்தம் உள்ள ஆயிரத்து 400 பேருந்துகளில் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மதுரையிலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், மினி வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக நாகை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட 11 பணிமனைகளில் உள்ள 521 பேருந்துகளில் 112 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள், கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். பள்ளி கல்லூரி மாணவர்கள், பேருந்து கிடைக்காததால், பேருந்து நிலையத்தில் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. உள்ளூரில் வேலைக்குச் செல்வோர், தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.