சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிப்பு: தொடர் விலையேற்றத்தால் பொதுமக்கள் வேதனை
Mar 1 2021 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மட்டுமின்றி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றப்பட்டது. இதனால் சிலிண்டரின் விலை கடந்த மாதத்தில் மட்டும் 100 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், இம்மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 25 ரூபாய் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் 710 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை தற்போது 835 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.