பாலியல் புகாருக்கு ஆளான டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவின் பேரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் கார் சாவி பறிக்கப்பட்ட விவகாரம் - செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரையும் விசாரிக்க முடிவு
Mar 1 2021 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் புகாருக்கு உள்ளான தமிழக காவல் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்பான வழக்கில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் காரை வழிமறித்து செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் அத்துமீறி நடந்து கொண்டது குறித்தும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், காவல்துறை சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனிடையே, புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டும் தொனியில், சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஸ்தாஸ் செல்போனில் பெண் அதிகாரியை தெடர்புகொண்டு பேச முயற்சித்தபோது, அவர் பேச தவிர்த்துள்ளதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனிடம் ராஜேஸ்தாஸ் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு வழியாக சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் வாகனத்தை, அங்குள்ள சுங்கச்சாவடியில் எஸ்.பி. கண்ணன் தலைமையிலான அதிவிரைவு படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும், பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்தாஸிடம் செல்போனில் பேசினால் மட்டுமே இங்கிருந்து செல்ல முடியும் என எஸ்.பி. கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுக்கவே பெண் அதிகாரியின் கார் சாவியை பறித்துடன், ஓட்டுநரையும் வாகனத்தை விட்டு எஸ்.பி. கண்ணன் கீழே தள்ளியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது செல்போனில் இருந்து ராஜேஸ்தாஸ்க்கு, போன் செய்து பெண் ஐபிஎஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக பேச வைத்துள்ளார்.
இதுபற்றிய தகவல் பரவியதும், பதவியை வைத்து அத்துமீறி நடந்து கொண்ட செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மற்றும் ராஜேஸ்தாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் ராஜேஷ் மீதான பாலியல் வழக்கில் இந்த புகாரையும் சேர்த்து விசாரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.