ரெம்டெசிவர் விற்பனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் - கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸ்களில் காத்திருக்க வைக்கக்கூடாது என அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
May 14 2021 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, ரெம்டெசிவர் விற்பனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் விற்பனை தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெம்டெசிவர் பெறுவதற்காக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் திரு. ஆர். சண்முகசுந்தரம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, ரெம்டெசிவர் விற்பனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்க வைக்கக்கூடாது என்றும், நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்காமல், போர்க்காலங்களில் பணியாற்றுவது போல் வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், சிறைகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த வேண்டும் - உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்கவும், மயானங்களிலும், கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, நீதிபதிகள் வழக்கை வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.