தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அரசு பேருந்துகள் இயக்குவது குறித்து அரசு தீவிர பரிசீலனை - 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்
Jun 18 2021 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், 40 நாட்களுக்கு பிறகு, வரும் 21-ம் தேதி முதல், 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல், கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வரும் நிலையில், கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் முதலில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருந்து மாவட்டத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்படுவது சற்று தள்ளி வைக்கலாம் என கூறப்படுகிறது. வரும் 21-ந் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது. திங்கட்கிழமை முதல் 50 சதவீத பேருந்துகளை இயக்கவும், அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் தயாராகி உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு நாளில் அனைத்து பணிமனையில் உள்ள பேருந்துகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.