அழியும் நிலையில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் - மாவட்ட நிர்வாகம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
Sep 10 2021 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் சத்திரம் அழியும் நிலையில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஆட்சியின் போது கட்டப்பட்ட மங்கம்மாள் சத்திரம் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட மண்டபம் தற்போது ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆனாலும் மக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. இதனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கலைநயத்துடன் கட்டப்பட்ட அரண்மனை எந்தவித பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்த சத்திரத்தில் மிகவும் வேலைப்பாடு நிறைந்த கற்தூண்களில் அழகான சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளதோடு நடு மண்டபம் அழகிய முற்றத்துடன் அமைக்கபட்டுள்ளது. மங்கம்மாள் சத்திரத்தில் 52 க்கும் மேற்பட்ட கற்தூண்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இருபுறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்திற்குப்பின் சிவகங்கையை வேலுநாச்சியார் ஆட்சி செய்தார். அவரிடம் தளபதியாக இருந்தவர்கள் மருது பாண்டிய சகோதரர்கள். அவர்கள் இருவரும் இந்த சத்திரத்தில் பள்ளிகள் அமைத்து மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தனர்.
1959-ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் படைப்பில் உருவான சிவகங்கை சீமை படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் நிறைந்த ராணி மங்கம்மாள் ஆட்சியின் நினைவுச் சின்னமாக விளங்கும் மங்கம்மாள் சத்திரம் தற்போது எவ்வித பராமரிப்பும் இன்றி பாழடைந்து காணப்படுகிறது. மண்டபம் முழுவதும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.
அதிகாரிகள் உடனடியாக இதனை சீர்செய்து சத்திரத்தை பராமரித்து நமது பாரம்பரிய சின்னங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் கோரிக்கை.