சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கு - சார்பு ஆய்வாளர் ரகு கணேசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Sep 17 2021 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக்கொலை வழக்கில், காவலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவராக சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில், சிறையிலேயே உயிரிழந்தனர். இவ்வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, 9 போலீசார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விரைவாக முடிக்க உத்தரவிடுமாறு ஜெயராஜ் மனைவி செல்வராணி, உயர் மீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவலர் ரகு கணேஷ், சென்னை உயர்நீதிமன்றம் தனது காவலை நீட்டித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரகு கணேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரகு கணேஷ் நீதிபதி முன் நேரடியாகவோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவோ ஆஜர்படுத்தப்படவில்லை என வாதிட்டார். மே மாதம் சூழ்நிலை எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரகு கணேஷின் கோரிக்கையை நிராகரித்தனர்.