உள்ளாட்சி அமைப்பு பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
Sep 17 2021 7:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இருக்கட்டங்களாக நடைபெறவுள்ளது.
தேர்தல் தொடர்பான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு குழுக்களை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் என, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடக்கும் உள்ளாட்சிப் பதவிகளுக்கான ஏல நடவடிக்கை தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஏல நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால், பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பப்படுவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.