தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை - இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்த முடிவு
Sep 17 2021 8:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக பொதுப்பணித்துறைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் திரு. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முல்லை பெரியாறு, ஆனைமலையாறு- நல்லாறு அணைத் திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் உள்ளிட்டவை குறித்து இருத்தரப்பிலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொதுப்பணித்துறைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, நதிநீர் பங்கீட்டில் இரு மாநில விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்களை செயல்படுத்தவும், இதில் எந்த பிரச்சினையும், மோதலும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்துவது தொடர்பாக மரங்களை வெட்டுவது குறித்து தமிழகம் சார்பில் அனுமதிக்க கேட்டதாகவும், இதுகுறித்து பரிசீலனை செய்து கேரள வனத்துறை விரைவில் அனுமதி வழங்கும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.