கள்ளக்குறிச்சி அருகே நடந்த பட்டாசு விபத்துக்கு, தடை செய்யப்பட்ட வீரியமிக்க வெடி மருந்தை பதுக்கி வைத்ததே காரணம் - முதல்கட்ட விசாரணையில் தகவல்
Oct 27 2021 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடந்த பட்டாசு விபத்து சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட வீரியமிக்க மருந்துகள் பதுக்கப்பட்டதே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சாலையையொட்டி இருந்த ஒரு பட்டாசு கடையில், நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அவ்வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறியதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.
தீ விபத்தின்போது அருகிலிருந்த பேக்கரி கடைக்கும் தீ பரவியதால், அக்கடையில் இருந்த 4 சிலிண்டர்களும் வெடித்து சிதறியது. இதில் 8 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனிடையே பட்டாசு கடை தீ விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட வீரியம் கொண்ட வெடி மருந்து பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.