தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் - விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Oct 27 2021 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பெண் எஸ்.பி.யை சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. டி.கண்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இப்புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்தக் குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீது குற்றம் சாட்டப்பட்ட சம்பவம், பயணத்தின்போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை எனவும், தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய சிறப்பு டிஜிபி-யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலியல் தொல்லை தொடர்பான வழக்கின் விசாரணையை, 3 மாதங்களில் முடிக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.