அந்தமான் கடற்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடலில் இன்று புயலாக வலுப்பெறும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Dec 2 2021 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மத்திய வங்கக்கடலில் புயலாக மாறுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடுமெனவும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா-தெற்கு ஓடிசா பகுதியில் 4-ம் தேதி அதிகாலையில் கரையை கடக்குமென வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஜாவித் என்று பெயர் சூட்டப்பட உள்ள இந்த புதிய புயல் காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இரு தினங்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடுமெனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடுமெனவும் கூறப்பட்டுள்ளது.