கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் - அறிவிப்பை திரும்பப்பெற்றது மதுரை மண்டல மின்வாரியம்
Dec 2 2021 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என்ற அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியத்தின் மதுரை மண்டலம் தற்போது திரும்பப்பெற்றுள்ளது. தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை மண்டல மின்வாரிய நிர்வாக தரப்பில் அந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல மின்வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றிக்கையில், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி, முதல் மற்றும் இரண்டாம் தவணையை, வரும் 7-ம் தேதிக்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என, கடந்த நவம்பர் 26-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், வாரிய தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விவர அறிக்கையை தவறாமல், அந்தந்த மின் பகிர்மான அலுவலகங்களின் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தும்படியும், மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் இதுகுறித்த விரிவான அறிக்கையினை டிசம்பர் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி தனி மனித உரிமை என கூறிய தமிழக அரசு, தற்போது அரசுப் பணியாளர்களையே ஊதியத்தை காரணம் காட்டி கட்டாயப்படுத்துவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் உமா, தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் நிறுத்தப்படாது என தெரிவித்துள்ளார்.