ராஜிவ் காந்தி வழக்கில் சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
May 18 2022 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை கடந்த 2014ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தொடர்ந்து, 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன்மீது 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர், குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.
இதனிடையே, குற்றமே நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த 2020ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். 10 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற வாதத்திற்கு இடையே அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்று கேட்ட நீதிபதிகள், நீதிமன்றமே விடுதலை செய்ய நேரிடும் என்று கூறினர். மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற கூறிய நீதிமன்றம், தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் எனவும் கண்டித்தது.
இந்நிலையில், 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.எல். நாகேஸ்வரராவ், திரு.பி.ஆர். கவாய், திரு. ஏ.எஸ். போபண்ணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 30 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.