தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
May 26 2022 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.