மதுரையில் ஊராட்சி மன்ற செயலர் மர்ம நபர்களால் படுகொலை : அடுத்தடுத்து நடைபெறும் கொலைகளால் மக்கள் அச்சம்
May 26 2022 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே ஊராட்சி மன்ற செயலர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் இடையபட்டி ஊராட்சியில் வரிச்சியூர் பகுதியை சேர்ந்த லஷ்மணன் என்பவர் செயலராக பணியாற்றி வந்தார். இவர் கருப்புகால் காளியம்மன் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை, லஷ்மணன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவில் பூஜைக்காக தச்சனேந்தல் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென வழிமறித்த சில மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லஷ்மணனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இரத்தவெள்ளத்தில் கிடந்த லஷ்மணனை சாலையில் சென்றவர்கள் தூக்கி, ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இதே வரிச்சியூர் பகுதியில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது ஊராட்சி மன்ற செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.