பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்பாட்டம்
May 26 2022 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மணிமேடை சந்திப்பில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய இரு மாநில தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் விலையை வெறும் கண்துடைப்புக்காக மத்திய அரசு குறைத்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
தூத்துக்குடியில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாதம்தோறும் உயரும் சமையல் கேஸ் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்தாத மத்திய அரசிற்கு எதிராகவும் கண்டித்தும கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை திருவான்மியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.