கோவில் திருவிழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி விவகாரம் - காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
May 26 2022 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவில் திருவிழாவின் போது, இரு தரப்பினர் இடையே பிரச்சனைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம் என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இருத்தரப்பினர் கூடுவதால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களின் போது, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் கோரியும், அனுமதி வழங்க வேண்டியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, அனைத்து சமுதாய மக்களும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு தரப்பினர் இடையே பிரச்சனைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம் என தெரிவித்ததுடன், அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுவதால் நிகழ்ச்சிக்கி அனுமதி மறுப்பது தவறு என்றும், அதனை நீதிமன்றம் ஏற்காது எனவும் குறிப்பிட்டார். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, காவல்துறையினர் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என்பதை காட்டுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பிரச்னைகளை தடுக்கவே காவல்துறை உள்ளதாகவும், திருவிழாக்களின் போது ஒலிபெருக்கிகள், மின் இணைப்பு வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறுவது என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.