பொதுக்குழு மேடையிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். - சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என அறிவித்துவிட்டு வைத்திலிங்கமும் வெளியேறினார்
Jun 23 2022 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரும் பரபரப்புக்கு இடையே இன்று கூடிய அ.தி.மு.க. பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது என கூறி ஓ.பி.எஸ்.ஸும், வைத்திலிங்கமும் திடீரென வெளியேறினர்.
அதிமுகவில் சர்வாதிகார போக்குடன் அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயன்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்ட அரங்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் எதிர் எதிர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
இந்த பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிப்படுவதாக எடப்பாடி தரப்பு அறிவித்தது. ஒற்றைத் தலைமை வந்த பிறகே எந்த தீர்மானமாக இருந்தாலும் நிறைவேற்றப்படும் என எடப்பாடி ஆதரவாளர் கே.பி.முனுசாமியும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் ஆவேசமாக அறிவித்தால், பொதுக்குழுவில் பதற்றம் ஏற்பட்டது.
இந்தப் பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது என ஓ.பி.எஸ். ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆவேசமாக கூறினார். இதனையடுத்து, பொதுக்குழுவில் இருந்து திரு. ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் மீது பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு எடப்பாடி கோஷ்டினர் வீசியெறிந்ததோடு, அவரை சுற்றி நின்று முதுகில் குத்தினர். வைத்திலிங்கத்தையும் எடப்பாடி தரப்பினர் தாக்கினர். மேலும், ஓ. பன்னீர்செல்வம் வந்த வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.
இதனிடையே, அடுத்த பொதுக்குழு கூட்டம், வரும் 11ம் தேதி நடைபெறும் என, இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் குறிப்பிட்டார். இதுபோன்ற பல்வேறு கூச்சல் குழப்பங்களுடன் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முடிந்தது.