தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
Jun 23 2022 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வரும் 26,27-ம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கரையோரம் பலத்த காற்று வீசும் என்றும், கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா கரையோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 35 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.