மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி
Jul 1 2022 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கிதருவதாக கூறி ஆட்சியரின் பெயரில் பணி ஆணை வழங்கியதோடு, ஆட்சியர் அலுவலகத்திலயே நேர்காணல் நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கே.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரிடம், அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பணிகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார். இதற்கு ஆதரவாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாண்டியராஜன் என்பவர் தனது நண்பர் ரஞ்சித் குமாருக்கு நன்கு அறிமுகமானவர் என்ற தகவலையும் அளித்துள்ளார். மேலும், அரசு வேலை வாங்கித் தருவதாக சேகரின் குடும்பம் மற்றும் உறவினர்கள் 28 பேரிடம் அலுவலக உதவியாளர் பணிக்கு தலா 4 லட்சம் ரூபாயும், அலுவலக ஆய்வாளர் பணிக்கு தலா 8 லட்சம் ரூபாயும், துப்புறவுப் பணியாளர் வேலைக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தமாக ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இது தொடர்பாக முனீஸ்வரனிடம் கேட்டபோது, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்த உத்தரவுகளைப் போல, நேர் காணலுக்கு வரும் படி பதிவு அஞ்சலில் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியல் அலுவலக வளாகத்திலேயே நேர் காணலும் நடத்தி, போலிப் பணி ஆணைகளை முனீஸ்வரனும், அவரது கூட்டாளிகளும் அளித்துள்ளனர். முனீஸ்வரனிடம் பணம் கொடுத்தவர்கள், இந்த போலி ஆணைகளை நம்பி, அலுவலகத்துக்குப் பணிக்குச் சென்ற போது தான் அவை போலியானவை எனத்தெரியவந்துள்ளது. இதையடுத்து முனீஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவான ரஞ்சித்தைத் தேடிவருகின்றனர்.