முசிறி அருகே ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை கத்தி முனையில் காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் - வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்ததால் பொதுமக்கள் பீதி
Jul 5 2022 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கத்தி முனையில் காரில் கடத்திச்சென்று வீட்டில் பீரோவில் வைத்திருந்த 12 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முசிறி அருகே தா.பேட்டையை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் தா.பேட்டை அருகே உள்ள வளையெடுப்பு கிராமத்திற்கு உறவினரை காண சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் நேற்று மீண்டும் தா.பேட்டை நோக்கி வந்துள்ளார். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 5 பேர் முத்துசாமியின் கைகள் மற்றும் கண்களை கட்டி காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை ஓர் அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து அவரிடம் இருந்து வீட்டின் பீரோ சாவியை பறித்துள்ளனர்.
பின்னர் அதனை கொண்டு கொள்ளையர்கள் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டை திறந்து பீரோவில் இருந்த 12 லட்ச ரூபாய் மற்றும் 6 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிசென்றுள்ளனர். இன்று அதிகாலை துறையூர் அருகே உள்ள சிக்கதம்பூர் பகுதியில் முத்துசாமியை விடுவித்துவிட்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முத்துசாமி சம்பவம் குறித்து தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.