மேட்டுப்பாளையம் பில்லூர் அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Aug 5 2022 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி, முள்ளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்தது. 100 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 97 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி, 4 மதகுகளும் திறக்கப்பட்டு, விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. எனவே, ஆற்றின் கரையோரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலி பெருக்கி மூலம், எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.