கடற்கரைகளில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Aug 5 2022 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரைகளில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் இன்றுமுதல் மாநராட்சியின் சார்பில் மெரீனா, பெசன்ட்நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்மப்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அதிபட்ச அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.