நெல்லையில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலை மறியல் : பதற்றமான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
Aug 6 2022 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பால் கட்டளையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பேச்சி ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் இன்று காலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பதற்றமான சூழல் நிலவுவதால் பால் கட்டளை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.