சென்னையில் மாநகர பேருந்து மோதி பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் - விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காவல் நிலையத்தில் சரண்
Aug 8 2022 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை, மாநகர பேருந்து மோதி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், மாநகர பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை, நேற்று மாலை, மாநகர பேருந்து மோதி கீழே விழுந்தது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் இருவர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் கோமா நிலைக்கு சென்ற சண்முகசுந்தரம் என்பவர், சிகிச்சை பலனின்றி அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது. உயிரிழந்த சண்முகசுந்தரத்திற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மாநகர பேருந்து ஓட்டுநரான ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ரகுநாத் மீது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், அஜாக்கிரையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல், தனி நபருக்கு காயம் ஏற்படுத்துதல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.