சின்னசேலம் அருகே, நகை கடையின் பூட்டை உடைத்து, 280 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Aug 8 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, நகை கடையின் பூட்டை உடைத்து, 280 சவரன் நகை, 30 கிலோ வெள்ளி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள புக்கிரவாரி பகுதியில், லோகநாதன் என்பவர், நகை கடை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க லோகநாதன் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 281 சவரன் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நகை கடைக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில், காலி நகை பெட்டிகள் சிதறி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.