மாமல்லபுரம் முதலைப் பண்ணையில் உள்ள ஆயிரம் முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Aug 10 2022 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாமல்லபுரம் முதலைப் பண்ணையில் உள்ள ஆயிரம் முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலைப்பண்ணையில் கூடுதலாக உள்ள ஆயிரம் முதலைகளை, குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய-மாநில அரசுத் துறைகள் அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7 ஆயிரத்து 300 சதுர மீட்டர் இடத்தில், 1000 முதலைகளை அடைக்கப்போவதாகவும், இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என்று அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, குஜராத்தில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிவதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்தனர். மேலும், முதலைகளை இடமாற்றம் செய்ய சட்டப்படி முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களும் அந்த மையத்தில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.