வேலூர் மாநகராட்சியில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் போடப்பட்ட அவலம்- விமர்சனங்களையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து
Aug 11 2022 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அடி பம்ப்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்துவாச்சாரி அடுத்த 19-ஆவது வார்டு விஜயராகவபுரம் 2-ஆவது தெருவில் இருந்த அடி பம்ப்புடன் சேர்த்து, கழிவு நீர் கால்வாயின் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த அலட்சியத்தால் அடி பம்ப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின்போது, இருசக்கர வாகனத்துடன் சேர்த்து சாலை அமைத்தது, ஜீப்புடன் சேர்த்து சாலை அமைத்தது போன்ற கேலிக்கூத்துகள் அரங்கேறியுள்ளன. இதுமட்டுமின்றி, 53 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் ஒழுகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் தரம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் அந்த அடிபம்பு அகற்றப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியை கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.