பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் : தமிழ் ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்
Sep 23 2022 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யவைத்து வீடியோ எடுத்து வெளியிட்ட தமிழ் ஆசிரியர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 284 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பள்ளியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், பள்ளியின் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர், தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்யவைத்து வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.