திருவாரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் : சிசிடிவி பதிவை வைத்து போலீசார் தீவிர விசாரணை
Sep 23 2022 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்றிரவு, புதிய பேருந்து நிலையத்திற்கு 4 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்துவிட்டு தப்பி சென்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சி பதிவாகி இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் பேருந்து நிலையத்தில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.