நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு படுக்கைகள் வழங்கப்படாத அவலம் - பச்சிளம் குழந்தையுடன் வெறும் தரையில் படுத்துக்கிடக்கும் வீடியோவால் அம்பலம்
Sep 23 2022 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு படுக்கைகள் கொடுக்காததால், பச்சிளம் குழந்தையுடன் பெண் ஒருவர் வெறும் தரையில் படுத்துக்கிடக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை ஹைகிரவுண்டில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் சமீபகாலமாக சிகிச்சை அளிப்பதிலும், நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதிலும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் நாள் கணக்கில் காத்திருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பிரசவ வார்டில் பிரசவம் முடிந்த பெண்களுக்கு படுக்கைகள் வழங்காததால் பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்து கிடக்கின்றனர். குறிப்பாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்களும் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.