தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் ஐபோன் பறிமுதல் - காதலின் நண்பரிடமிருந்து கைப்பற்றியது காவல்துறை
Sep 23 2022 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை விருகம்பாக்கத்தில் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்த திரைப்பட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன செல்போனை, அவரது காதலனின் நண்பரிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வசித்து வந்த நடிகை பவுலின் தீபா, தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் துணை நடிகையாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இயக்குனரும், தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு, தனது விருகம்பாக்கம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் நடிகை தீபா கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நடிகை பவுலினின் சகோதரர் ராஜேஷ் பவுலின், 3 செல்போன்களை பயன்படுத்தி வந்த தனது சகோதரியின் ஐ-போன் ஒன்று காணாமல் போயுள்ளதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நடிகை பவுலின் மற்றும் சிராஜுதீன் இருவரும் காதலித்து வந்தது உறுதியானது. சிராஜுதின் மற்றும் பவுலின் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் போது, சிராஜுதின் பவுலினுக்கு வாங்கி கொடுத்த ஐபோனை பவுலினிடம் இருந்த பெற்று வருமாறு சிராஜுதின் கூறியதினால் சில நாட்களுக்கு முன்பே, தான் பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையின் 3 செல்போன்களையும் சைபர் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளதுடன், காதலன் சிராஜுதினிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.