திருப்பூர்: தொடர் விடுமுறை எடுத்த 9 ஆம் வகுப்பு மாணவி மீது தலைமையாசிரியை பிரம்பால் சரமாரி தாக்குதல்
Sep 23 2022 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே விடுமுறை எடுத்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியை தலைமையாசிரியர் ஜெயலட்சுமி சரமாரியாக தாக்கியது தொடர்பாக நீண்ட இழுபறிக்கு பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அடுத்துள்ள பெரியவாளவாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது . இங்கு 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தொடர் விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தாயார் கோகிலா கடந்த 13-ம் தேதி ஆசிரியரிடம் விடுமுறை எடுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். ஆனால் தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, மாணவி சத்யாவை அழைத்து வரச் சொல்லி மூங்கில் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தோள்பட்டை, கால் தொடை, கை பகுதிகளில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 14ஆம் தேதி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை. இந்த நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா சம்பவம் நடைபெற்ற அரசு பள்ளியில் தீவிர விசாரணை நடத்திய பின்னர், மாணவி சத்யாவை அடித்து காயப்படுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முறையாக வழக்கு பதிவு செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.