ஒரு மணிநேர மழைக்குக் கூட தாங்காத சென்னை : பல இடங்களில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
Sep 26 2022 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு பெய்த மழைக்கே பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. அண்ணாசாலை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கே.கே நகர், பசுமைவழிச்சாலை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அரும்பாக்கம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு மணி நேர மழைக்கே பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேபோல், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம் திரிசூலம், பழவந்தாங்கல், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
சென்னையில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காது என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.