தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Sep 26 2022 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 400-க்கும் அதிகமான மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 17 தொழிற்சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.
நாகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பாக நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு அனைத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்தப்போராட்டத்தில், தமிழக அரசு கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் அலுவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காலை முதல் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியம் தனியார் மயத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.