சிறைக் கைதிகள், உறவினர்கள் பேசிக்கொள்ள வசதியாக இன்டர்காம் தொலைபேசி : தமிழகத்திலேயே முதல்முறையாக கோவை சிறையில் புதிய வசதி அறிமுகம்
Nov 24 2022 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், குண்டத் தடுப்பு சட்ட கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் செவ்வாய், வியாழக்கிழமைகளிலும் பார்த்து பேச அனுமதிக்கப்படுகிறது.
சிறை கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்றுதான் பேச முடியும். வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களும் இதேபோன்றுதான் பேசும் நிலை இருந்து வந்தது. வயதான கைதிகள், வயதான உறவினர்கள் பரஸ்பரம் பேசிக்கொள்வதில் சிரமம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் உத்தரவுப்படி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, ஜெயிலர் சிவராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்டர்காம் தொலைபேசி மூலம் கைதிகளும், உறவினர்களும் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நடைமுறை தற்போது அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே கோவை சிறையில்தான் இந்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.