திருநின்றவூர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... விஷம் குடித்தபின் வீடியோ வெளியிட்டு பள்ளித்தாளாளர் வினோத் கதறல்
Nov 24 2022 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருநின்றவூர் அருகே ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகி வினோத்குமார், கோவாவுக்கு தப்பியோடிய நிலையில், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், லக்ஷ்மிபுரம் பகுதியில் இயங்கி வரும் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளியின் தாளாளர் சிந்தை ஜெயராமன் மகனும், பள்ளி நிர்வாகியுமான வினோத், பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம், கவுன்சிலிங் என்ற பெயரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பல மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சைக்கோ எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூற, விவகாரம் பூதாகரமானது. இதேபோல் பல மாணவிகளை வினோத் பலவந்தப்படுத்தியது தெரியவர, கொதித்தெழுந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருடன் இணைந்த கிராம மக்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரது மகனும், நிர்வாகியுமான வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான வினோத்தை பிடிக்க தனிப்படை போலீசார், கோவா விரைந்துள்ள நிலையில், கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வினோத் வெளியிட்டுள்ளார். அதில், தான் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி, மாணவி, மாணவிகளுக்கு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
கோவாவுக்கு தப்பியோடிய வினோத்தை பிடிக்க தனிப்படை போலீசார் கோவா விரைந்துள்ள நிலையில், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் வீடியோவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.