கோவை மேட்டுப்பாளையம் பவானியாற்றில் வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள்... கயிறு கட்டி, பரிசல் மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
Nov 25 2022 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் நெல்லித்துறை அருகே பவானியாற்றில் சிக்கிய 7 இளைஞர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை பீளமேடு நேரு நகர் பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை பவானியாற்றில் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, பில்லூர் அணையிலிருந்து திடீரென தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், 7 இளைஞர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே உள்ள திட்டில் ஏறிக்கொண்டு தங்களை காப்பாற்றும்படி கதறியுள்ளனர். இளைஞர்களின் கதறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சுமார் 1 மணி நேரம் போராடி, கயிறு கட்டி, பரிசல் மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்தநிலையில் பவானி ஆற்றுப் பகுதிக்கு மாலை வேளைகளில் வந்திருந்த இளைஞர்களை ஆற்றில் இறங்கக் கூடாது என, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.