முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதிக்காக சென்னை மெரினாவில் கடலின் நடுவே 137 அடி உயர பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதற்காக, இன்று நடத்துவது கருத்துக்கேட்பு கூட்டமா, அல்லது கட்டப்பஞ்சாயத்தா என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். யாருக்கும் பலனளிக்காத பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்துக்காக நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதிக்காக சென்னை மெரினாவில் கடலின் நடுவே 137 அடி உயர பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதற்காக கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் கலந்து கொண்டவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் நியாயமான கருத்துக்களை பேசி வருகிறார்கள்.
ஆனால், திமுகவினரோ அவர்களின் கருத்துக்களை கூட சொல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படுத்தி யாரையும் பேச விடாமல் துரத்தி அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
தற்போது நடந்து கொண்டு இருப்பது கருத்துக்கேட்பு கூட்டமா? அல்லது கட்டப்பஞ்சாயத்தா? என்கிற அளவுக்கு எண்ணத் தோன்றுகிறது என சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை எதற்காக அனைவரும் எதிர்க்கிறார்கள் என்பதை திமுகவினர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், கடலில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதால் சுற்றுப் புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய கடும் நிதி நெருக்கடியில், இந்த திட்டத்திற்காக பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழிப்பது உகந்ததா? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும் - யாராலும் இதனை ஒரு அறிவார்ந்த செயலாக பார்க்கமாட்டார்கள்.
மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் கடலின் நடுவே இதுபோன்ற கட்டுமானங்களை ஏற்படுத்தும்போது, இது சமூக விரோதிகளின் புகலிடமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இதில் சமூக விரோத செயல்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த விழிப்புடன் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ஏற்கனவே பல்வேறு பணிசுமைகளை தாங்கிக்கொண்டு இருக்கும் காவல் துறையினருக்கு இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் இந்த ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
எனவே, திமுக ஆட்சியாளர்கள் இது போன்று யாருக்கும் பலனளிக்காத பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்திற்காக நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டு கொண்டுள்ளார்.