தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை திமுக அரசு 33 சதவிகித அளவுக்கு உயர்த்தியிருப்பதை உடனே கைவிட வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதன் மூலம் அவர்களின் உள்நோக்கம் என்னவென்று அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் திமுகவினர் விஞ்ஞான ரீதியாக பித்தலாட்டங்களை அரங்கேற்றுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் - அதாவது, தமிழ்நாட்டில் உள்ள சாமானிய நடுத்தர மக்கள் இன்றைக்கு ஒரு சிறிய இடத்தை அவர்கள் பெயருக்கு பதிவு செய்ய வேண்டுமானால், கூடுதலாக செலவு செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சதுர அடி 666 ரூபாயாக இருந்த வழிகாட்டு மதிப்பு, இன்றைக்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டு மதிப்பு சதுரஅடி ரூ.666ஆக இருந்தபோது, ஏற்கனவே இருந்த 4 சதவிகித பத்திர பதிவு கட்டணத்தின் அடிப்படையில் பத்திர பதிவுக்கு ஆகும் மொத்த செலவை கணக்கிட்டால் 31 ஆயிரத்து 912 ரூபாய் அளவுக்கு செலவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்றைக்கு அதே சொத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் உயர்த்தப்பட்ட வழிகாட்டு மதிப்பீட்டின்படி சதுரஅடி ஆயிரம் ரூபாய்க்கு, தற்பொழுது 2 சதகிவிதமாக பத்திரப் பதிவுக்கட்டணத்தை குறைத்திருந்தாலும், மொத்த செலவினத்தை கணக்கிட்டால் 39 ஆயிரத்து 204 ரூபாய் கட்டவேண்டியுள்ளது என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அதாவது, 7 ஆயிரத்து 92 ரூபாய் அளவுக்கு கூடுதலாக பத்திரப்பதிவுக்கு செலவிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எனவே, இந்த ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் சாமானிய நடுத்தர மக்களுக்கு நிலம் வாங்குவது வெறும் கனவாகி போய்விடும் எனவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பத்திரப்பதிவும் எண்ணிக்கையில் குறைந்து, தமிழக அரசுக்கு வருமான இழப்பும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள சின்னம்மா, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக உள்ளவர்களின் பெயர்களில்தான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ள நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதாக பொதுமக்கள் கருதுகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதுபோன்று கருத்துக்கள் இருக்கும்போது திமுக தலைமையிலான அரசு நிலத்தின் வழிகாட்டு மதிப்பை திடீரென்று உயர்த்தியிருப்பது யாருடைய நலனுக்காக?, யாருடைய வருமானத்தை பெருக்குவதற்காக? இதனால் உண்மையாக பயனடையப் போகிறவர்கள் யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகிறார்கள் என சின்னம்மா தெரிவித்துள்ளார்.
எனவே வாக்களித்த மக்களையும் ஏமாற்றிவிட்டு இந்த ஆட்சியாளர்கள் யாருக்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது என்றும், இதன் காரணமாக ரியல் எஸ்டேட் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டு இருக்கும் சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும் எனவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 33 சதவிகிதம் அளவுக்கு உயர்த்துவதை உடனே கைவிட வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.