அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையிட வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர், கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சி அமைந்தது முதலே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதனை ஒப்புக்கொள்வது போல செந்தில்பாலாஜியின் நடவடிக்கை அமைந்தது. இதே குற்றச்சாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் தொடர்பாக கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது சகோதரர் அசோக் குமார் இல்லத்திலும் சோதனை நடத்தியபோது, அங்கு வந்த திமுகவினர் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் அவர்களது கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
சோதனையின் ஈடுபட்ட பெண் அதிகாரியை சுற்றிவளைத்த திமுக பிரமுகர்கள், அவரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்த ரகளையில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டின் முன்பு குவிந்த திமுகவினர், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுகவினருக்கு பயந்து அதிகாரிகள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனையிட வந்தபோது, திமுகவினர் தங்களை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்ததுடன், உரிய பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டிலும் 10க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்ட திமுகவினர், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பசுமைவழிச் சாலை பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் காலை முதல் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் 5 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கரூரில் திமுகவினர் தாக்கியதில் காயம் அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமார், சீனிவாச ராவ், பங்கஜ் குமார் ஆகிய நால்வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதேபோல், கரூர் காளிபாளையத்தில் செந்தில்பாலாஜியின் நண்பர் பெரியசாமி வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினருடன், திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், அந்த இடத்திலும் சோதனை நடத்த முடியாத அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு திண்டல் சக்திநகரை சேர்ந்த சச்சிதானந்தம் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு கார்களில் வந்த அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அரசு மதுக்கடைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.