நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ள சலுகை - தமிழக அரசு அறிவிப்பு
Apr 29 2017 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி, விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளர்களும் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை கட்டணமின்றி எடுத்துக்கொள்ள வகைசெய்யும் விதத்தில் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வறட்சியையொட்டி, விளை நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த வண்டல் மண் நிரப்பவும், நீர்நிலைகளை தூர்வாரி கொள்ளவை அதிகப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆயக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி கொள்ளளவை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயப் பணிகளுக்காக ஏரிகளில் இருந்து களிமண்ணை சீனியரேஜ் தொகை இல்லாமல் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் மண் மற்றும் வண்டல்மண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். நஞ்சை நிலங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 75 கனமீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஏக்கருக்கு 90 கனமீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.
இதேபோன்று மண்பாண்டத் தொழிலாளர்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளில் இருந்து சீனியரேஜ் தொகையை செலுத்தாமல் 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சலுகை, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் - எந்தந்த நீர் நிலைகளில் இருந்து மண் எடுக்கலாம் என்ற விபரம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால், மாவட்ட அரசிதழில் வெளியிடப்படும். இந்த வாய்ப்பை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.