நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உயிருக்கு ஆதராமாக விளங்கும் தண்ணீரை சேமிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், தண்ணீரை சிக்கனப்படுத்தும் கருவியை கண்டுபிடித்து சாதனைபடைத்துள்ளார்.
"நீரின்றி அமையாது உலகு" - என்றார் வள்ளுவர். ஆம், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும், இயற்கை வளங்களுக்கும் இன்றியமையாததாக விளங்குகிறது திரவத் தங்கம் என அழைக்கப்படும் நீர். இதனால் தான் நீரின் முக்கியத்துவத்தை, சங்க இலக்கியங்களும் போற்றிப் பாராட்டியுள்ளன.
"வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்" - என்றார் அவ்வையார்.
பழந்தமிழர்களோ, நிலம் எனப்படும் உடம்பு அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், நீர்நிலைகளான உயிரைப் பேண வேண்டும் என்று நீரின் சிறப்பை பலவகைகளில் எடுத்துரைத்துள்ளனர்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட நீரினை பெருக்குவதற்கு, இந்த மானுடம் முயற்சி மேற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக உலகப்போர் உருவாகக் கூடிய சூழல் ஏற்படுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனால்தான் மழை நீரை சேமிப்பது என்பது ஒவ்வொருவரின் கடமையாகிறது. இதனை உணர்ந்துதான், நாட்டுக்கு முன்மாதிரியாக மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தினார் மறைந்த மாண்புமிகு அம்மா என பாராட்டும் சமூக ஆர்வலர்கள், இந்தத் திட்டத்திற்கு, தனிகவனம் செலுத்தி, மேலும் இதனை செம்மையாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நீரின் அவசியத்தை உணர்ந்தும், நீரை சிக்கனமாக பயன்படுத்தி நாம் வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் பயனுள்ள வகையில், "வாட்டர் லெவல் கண்ட்ரோல் இன்ஸ்ட்ரூமெண்ட்" என்ற கருவியை உருவாக்கியிருக்கிறார், வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ரமேஷ்பாபு.
விவசாயத்திற்கும், தண்ணீர் சிக்கனத்திற்கும் பெரிதும் பயன்படும் இந்தக் கருவியை, அரசு ஆய்வு செய்து, அனைவரும் பயன்படுத்தும் விதமாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கிறார் ரமேஷ் பாபு.
வாட்டர் லெவல் கண்ட்ரோல் கருவியின் மூலம், பப்பாளி, எலுமிச்சை, கரும்பு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதுடன், மின்சாரமும் சிக்கனமாக செலவாகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.