திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்பாட்டத்தால் பெரும் பரபரப்பு
Aug 19 2017 8:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருவாரூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி சென்றபோது, அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காவிரி உரிமை மீட்புகுழுவினர், கையில் கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு உரிய காவேரி நீரை பெற்றுத்தராத முதலமைச்சர் - காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள முதலமைச்சர், காவேரி டெல்டா மாவட்டத்தில் கால்பதிக்ககூடாது என்றும், அவர் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர். காவேரி நீர் பிரச்னையில், தமிழக முதலமைச்சர், டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
காவேரி பிரச்னையில் தமிழக நலன்களையும், டெல்டா விவசாயிகளின் நலன்களையும் முழுமையாகப் பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.