தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் டெங்கு அச்சுறுத்தல் முற்றுகிறது - நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரிப்பதால் மக்கள் பீதி
Oct 16 2017 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு, சுகாதாரத்துறையின் அலட்சியம், உள்ளாட்சி நிர்வாகங்களின் செயலற்றதன்மை ஆகியவை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தில் உள்ள மணல்வாடியை சேர்ந்த முகம்மது தானிஸ் என்பவரின் 3 வயது மகள் மகதியா பேகம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்தின் மகன் சதீஷ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை சேர்ந்த அம்மாவாசி என்ற பெண்மணி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதேபோல், திண்டுக்கல், திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் சிலர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.