சென்னை தியாகராயநகரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது : உயர்கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
Oct 16 2017 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தியாகராயநகரில், தீபாவளி விற்பனை களைகட்டியுள்ள நிலையில், உயர்கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள்கொண்டாடப்படுவதையொட்டி, அதனை வரவேற்க மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகளை வாங்க, கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை தியாகராயநகர் பகுதியில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களை கண்காணிக்க 5 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகின்றன. காவல்நிலையங்களில் ஏற்கெனவே பதிவில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அந்தக் குற்றவாளிகள் தியாகராயர் நகர் பகுதிக்கு வரும்பட்சத்தில் அவர்களைப் பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.