தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு, சுகாதாரத்துறையின் அலட்சியம், உள்ளாட்சி நிர்வாகங்களின் செயலற்றதன்மை ஆகியவை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமானோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்ற கூலி தொழிலாளியின் 9-வயது மகள் நாகேஸ்வரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3 நாட்களில் வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அரசு தவறிவிட்டதாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூசாரிக்களம் பகுதியை சேர்ந்த தியாகு என்பவரது இரண்டரை வயது மகன் தரனிஷ்வரன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாகை மாவட்டம் குத்தாலம் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி, கழிவு நீர் வெளியேறி வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தில் உள்ள மணல்வாடியை சேர்ந்த முகம்மது தானிஸ் என்பவரின் 3 வயது மகள் மகதியா பேகம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரது மகன் சதீஷ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள்அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக, இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் திரு. கோபால் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கு, டெங்கு காய்ச்சல் முற்றியுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.